U19 WC | பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!

பெனோனி: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதன் மூலம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. மொத்தம் 41 போட்டிகள். இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டுள்ளது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இந்தியா இறுதிக்கு முன்னேறியது. இந்த சூழலில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 48.5 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸி அணி விரட்டியது. 49.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பவுலர் அலி ராசா, 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.