IND vs ENG 2-வது டெஸ்ட் | “இலக்கை விரைந்து எட்ட விரும்புகிறோம்” – ஜேம்ஸ் ஆண்டர்சன்

விசாகப்பட்டினம்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை விரைந்து எட்ட தங்கள் அணி விரும்புவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் மேலும் 332 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்களும், இங்கிலாந்து 253 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் மேலும் 332 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும். இந்த சூழலில் அந்த அணியின் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தது..

“பயிற்சியாளர் மெக்கல்லம் எங்களிடம் தெரிவித்தது ஒன்றே ஒன்று தான். அவர்கள் 600 ரன்கள் எடுத்தாலும் அதை நாம் சேஸ் செய்ய வேண்டும் என அணியின் மீட்டிங்கில் தெரிவித்தார். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இந்தப் போட்டியில் மேலும் 180 ஓவர்கள் வீச வேண்டி உள்ளது. ஆனால், நாங்கள் 60 அல்லது 70 ஓவர்களில் இலக்கை எட்ட விரும்புகிறோம். இது எங்கள் ஆட்டத்தின் அணுகுமுறை. எங்கள் அணியில் அதை செய்யும் திறன் கொண்ட வீரர்கள் உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.