ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் நடந்த தைப்பூச மகா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோயிலில், கடந்த 18-ம் தேதி தைப்பூசத் தேர் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும், முருகப் பெருமான் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். கடந்த 26-ம் தேதி நடந்த தைப்பூசத் தேர்த் திருவிழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தைப்பூசத் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் நேற்று நடந்தது. சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில், நேற்று காலை 9 மணிக்கு மேல் வள்ளி – தெய்வானை சமேத முத்துக் குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து டன் கணக்கில் கொண்டு வரப்பட்ட பல வகையான மலர்கள் மற்றும் பல்வேறு வகையான திரவியங்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக 100-க்கும் மேற்பட்ட ஹோம பொருட்களுடன் பக்தர்கள் 4 ராஜ வீதிகளில் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு மேல் மகா தரிசனம் நடைபெற்றது. அப்போது நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் மகா தரிசன நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் சுவாமிகள் 4 ராஜ வீதிகளிலும் திருவீதி உலா வந்து, கைலாச நாதர் கோயிலை அடைந்தனர்.
இன்று ( 31-ம் தேதி ) இரவு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் அன்னக்கொடி, செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இன்று ( 31-ம் தேதி ) இரவு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.