வடலூர் தைப்பூச ஜோதி தரிசனக் கொடியேற்றம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாக் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூசப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சத்துக்கும் மேற்பட்டோர் வடலூருக்குத் திரண்டுவருவர்.

நடப்பாண்டு 153-வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. அதிகாலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. காலை 7.30 மணியளவில் தரும சாலை அருகே சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து, மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது.

பார்வதிபுரம் பொதுமக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பல்லக்கை சுமந்து, பழங்கள், சீர்வரிசைப் பொருட்களுடன் ஊர்வலமாக சத்தய ஞான சபை கொடிமரத்தின் அருகே வந்தனர். அங்கு கூடியிருந்தவர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி; தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளலாரின் வாசகத்தை முழங்கி, வள்ளலாரின் கொடி பாடல்கள் பாட, சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு சத்திய ஞான சபையை வலம் வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (ஜன.25) நடைபெறுகிறது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கும், தொடர்ந்துகாலை 10, மதியம் 1, இரவு 7, 10 மணி, நாளை (ஜன.26) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தைப்பூச நிகழ்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன. காவல் துறை சார்பில் வடலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.