தனுஷ், பிரியங்கா மோகன் உட்பட பலர் நடித்து வெளியான படம், ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த 12-ம் தேதி வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதையை தனது ‘பட்டத்து யானை’ நாவலில் இருந்து எடுத்துள்ளதாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். என் நாவலின் ஹீரோ, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பார். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை கொஞ்சம் மாற்றி ‘கேப்டன் மில்லர்’ படமாக எடுத்துள்ளனர். நானும் சினிமாவில்தான் இருக்கிறேன். என்னிடம் அனுமதி கேட்டு அதை எடுத்திருக்கலாம். இதுபோன்று என் சிறுகதைகள், நாவல்களில் இருந்து நிறைய விஷயங்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக இருக்கிறது. ஒரு படைப்பாளியாக இது வேதனையாக இருக்கிறது” என்றார்.