திருவாவடுதுறை ஆதீனம் பட்டினப் பிரவேசம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம்நாளான நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வான பட்டினப் பிரவேசம் நடைபெற்றது.

இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோமுக்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். மேலும், சிறப்பாக சமயப் பணியாற்றியோர், நாகசுர வித்வான்கள், ஓதுவார்கள், சிவாச்சாரியார் உள்ளிட்ட 7 பேருக்குவிருது, தலா ரூ.5 ஆயிரம் பொற்கிழி அளித்து ஆசி வழங்கினார்.

பின்னர், ஆதீன கவிராட்சச கச்சியப்ப முனிவர் அருளிய ’திருவானைக்காப் புராணம்-மூலமும், உரையும்’ என்ற தலைப்பில் முனைவர் கா.நாகராசு உரை எழுதிய நூலை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட, செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் லசிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு லட்சத்து எட்டுருத்ராட்ச மணிகளாலான தலைவடம் அணிந்து, பவளமணி,கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.

பின்னர், பக்தர்கள் பல்லக்கை சுமந்து செல்ல, ஆதீனம் நான்குவீதிகளிலும் உலா செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெற்றது. வழியெங்கும் ஆதீனத்துக்கு பக்தர்கள் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். நிறைவாக, திருமடத்தின் கொலு மண்டபத்தில் சிவஞானக் கொலுக்காட்சியில் எழுந்தருளினார்.

நிகழ்ச்சியில், ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர்கள் சண்முகம், குருமூர்த்தி, ராம், அலுவலக மேலாளர் சுந்தரேசன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.