சபரிமலை மகரவிளக்கு பூஜை நிறைவு: ஊர் திரும்பும் பக்தர்களுக்காக ஜன.21 அதிகாலை வரை சிறப்பு பேருந்துகள்

குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு வழிபாடுகள் நிறைவடைய உள்ளதால் நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கடைசி நேர பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக நாளை மறுநாள் அதிகாலை வரை பம்பையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லிலே நிறுத்தப்படும். பின்பு கேரள அரசுப் பேருந்துகள் மூலமே பம்பைக்கு செல்ல முடியும். அங்கிருந்து சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவ.16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிச.27-ல் நடைசாத்தப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக டிச.30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. மண்டல, மகர விளக்கு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களுக்காக இரவும், பகலும் ஏராளமான பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து இருமார்க்கமாகவும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், நாளை (சனி) இரவு 10 மணியுடன் பக்தர்களுக்கான தரிசன காலம் முடிகிறது. நாளை மறுநாள் (ஞாயிறு) பந்தளம் ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு காலை 6 மணியுடன் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பு ஆண்டுக்கான மகரவிளக்கு வழிபாட்டு காலம் நிறைவடைகிறது. ஆகவே, ஊர் திரும்பும் கடைசி நேர பக்தர்களுக்காக பம்பையில் இருந்து சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி நாளை இரவு முழுவதும் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு நேர வரையறை இன்றி தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், நாளை மறுநாள் (ஞாயிறு) அதிகாலை 4 மணி வரை நீண்டதூர பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கேரள அரசு போக்குவரத்துக் கழக பம்பை சிறப்பு அதிகாரிகள் கூறுகையில், ”மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் பம்பை-நிலக்கல் வழித்தடத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் முறை பேருந்துகள் இயக்கப்பட்டன. தொலைதூரத்துக்கு 34 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில் 64.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.38.88கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான தரிசன காலம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் அன்று இரவு முழுவதும் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும். நாளை மறுநாள் (ஞாயிறு) அதிகாலை 4 மணி வரை செங்கனூர், கோட்டயம், குமுளி, திருவனந்தபுரம், திருச்சூர் போன்ற நீண்ட தூரத்துக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” என்றனர். வரும் பிப். 13-ம் தேதி மீண்டும் மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளது.