SA vs IND முதல் டெஸ்ட் | முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவிப்பு

செஞ்சுரியன்: செஞ்சுரியனில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணியை விட 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் சதத்தின் உதவியால் இந்திய அணி 67.4 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, நந்த்ரே பர்கர் 3 விக்கெட்களையும் மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து தென்ஆப்பிரிக்க அணி பேட் செய்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்களுடனும், மார்கோ யான்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது.

டீன் எல்கர் மற்றும் மார்கோ யான்சன் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 100 ரன்களை கடந்த இந்தக் கூட்டணியின் பார்ட்னர்ஷிப்பை பிரித்தார் ஷர்துல் தாகூர். 185 ரன்கள் எடுத்திருந்த டீன் எல்கர் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதன்பின் சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் விக்கெட்களை இழந்தாலும், மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மார்கோ யான்சன். இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த அவர் 84 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம், 108.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணியை விட 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட், சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இந்திய அணி ஐந்து ரன்களுக்கே ஒரு விக்கெட்டை இழந்துவிட்டது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் விக்கெட்டாக ரபாடாவின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.