கெபெர்ஹா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 211 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மாலை 4.30 மணிக்கு கெபெர்ஹாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 2-வது பந்திலேயே எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டானார். சாய் சுதர்ஷன் – திலக் வர்மா இணைந்து 11 ஓவர் வரை விக்கெட் இழப்பில்லாமல் கொண்டு சென்றனர்.
நந்த்ரே பர்கர் வீசிய 12-வது ஓவரில் திலக் வர்மா 10 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் – சாய் சுதர்சஷனுடன் பாட்னர்ஷிப் அமைக்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடி காட்டிய சாய் சுதர்ஷனை, லிசாட் வில்லயம்ஸ் விக்கெட்டாக்கினார். 83 பந்துகளில் 62 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார் சுதர்ஷன். தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் கிளம்பினார். நிலைத்து ஆடிய கே.எல்.ராகுல் 56 ரன்னில் கிளம்ப 36 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 168 ரன்களைச் சேர்ந்திருந்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.
ரிங்கு சிங் 17 ரன்கள், குல்தீப் யாதவ் 1 ரன், அக்சர் படேல் 7, அர்ஷ்தீப் சிங் 18 என சொற்ப ரன்களில் திணறியது இந்திய அணி. 46.2-வது ஓவரில் அவேஷ் கான் 9 ரன்னில் ரன்அவுட்டாக இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில், நந்த்ரே பர்கர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லிசாட் வில்லயம்ஸ், ஏய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.