சபரிமலையில் நடந்த டிரம்ஸ் சிவமணியின் இசைக் கச்சேரி!

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலிலில் பிரபல டிரம்ஸ் இசைப்பாளர் சிவமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் கேரள அரசின் பாரம்பரிய கலைகளான களரி, கதகளி, இசை, நடனம், சொற்பொழிவு, பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக இன்று காலை டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள பிரபல பாடகர் சுதீப்குமார் பாடினார். சங்கீத நாடக அகாடமியைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐயப்பனுக்கான பல்வேறு துதிபாடல்கள் பாடப்பட்டன.

சிவமணி கூறுகையில், எனது உயர்வுக்கு ஐயப்பன்தான் காரணம். ஆகவே 1984-ம்ஆண்டு முதல் மண்டல பூஜை காலங்களில் இங்கு வந்து கொண்டிருக்கிறேன். ஐயப்பனின் தரிசனம் கிடைத்தது எனது பாக்கியம் என்றார்.

தொடர்ந்து அன்னதானகூடத்துக்குச் சென்று பக்தர்களுக்கான அன்னதானங்களை பரிமாறினார்.

முன்னதாக இவர் தனது மகள் மிலானாவுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்பு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மேல்சாந்தி பிஎன்.மகேஷ் ஆகியோரை சந்தித்தார்.