மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் விளாசி, புதிய சாதனை படைத்த விராட் கோலிக்கு நடிகை கங்கனா ரனாவது புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேனான விராட் கோலி தனது 50-வது சதத்தை விளாசினார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறிடியத்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற மகத்தான வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார்.
ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள், டெஸ்ட் போட்டியில் 29 சதங்கள், டி 20-ல் ஒரு சதம் என ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான ஆட்டங்களிலும் 80 சதங்களை இதுவரை அடித்துள்ளார் விராட் கோலி. இந்த வகையிலான சாதனையில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும், டெஸ்டில் 51 சதங்களையும் என ஒட்டுமொத்தமாக 100 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.
விராட் கோலியின் இந்த சாதனையையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத், இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: “என்ன ஒரு அற்புதம்! தனது சாதனைகளை முறியடிப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த முன்னுதாரணத்தை கோலி அமைத்துள்ளார். அவர் நடக்கும் பூமியை அவர்கள் வணங்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர். வியத்தகு மதிப்பும், சிறந்த பண்பும் கொண்ட உயர்ந்த மனிதர்”. இவ்வாறு கங்கனா புகழாரம் சூட்டியுள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in