ஸ்மார்ட்போன் அழைப்புகளை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கும் அசத்தல் ஏஐ அம்சத்தை அடுத்த ஆண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இது குறித்த அறிவிப்பை பிளாக் பதிவு ஒன்றில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்ஸி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம்.
இந்த சூழலில் ஸ்மார்ட்போன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஏஐ அடிப்படையில் இயங்கும் சில அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங். இது ஸ்மார்ட்போன் பயனர்களின் வருங்கால பயன்பாடு என வர்ணிக்கப்படுகிறது. ‘கேலக்ஸி ஏஐ’ என இதனை சாம்சங் அறிவித்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த அம்சம் இடம்பெற்றுள்ள போன்களில் நிகழ் நேரத்தில் அழைப்புகளை மொழிபெயர்க்கும் அம்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே ஒரு மொழியை மட்டுமே தெரிந்தவர்கள் மாற்று மொழி அறிந்தவர்களுடன் உரையாட முடியும் என தெரிகிறது.
இதில் ஆடியோ மற்றும் டெக்ஸ்ட் மொழிபெயரப்பினை பயனர்கள் பெற முடியும் என தெரிகிறது. இது கேலக்ஸி ஏஐ-ன் கிளிம்ப்ஸ் மட்டும் தான் என்றும் சாம்சங் தெரிவித்துள்ளது. தொலைபேசிகள் ஆரம்ப கட்டத்தில் அழைப்புகள் மேற்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதை சொல்லி இந்த உதாரணத்தை சாம்சங் சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in