புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த விதம். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இது நடந்தது.
இந்த சூழலில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன். “இப்போது நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் ஃபீல்டர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து நான் நடுவரிடம் முறையிட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேனா அல்லது திரும்ப பெறுவேனா என என்னிடம் நடுவர்கள் கேட்டார்கள். இந்த வகை அவுட் கிரிக்கெட் விதிகளில் உள்ளது. அது சரியா, தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக நான் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது.
இது குறித்த விவாதங்கள் இருக்கும். ஆனால், அது விதிகளில் உள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதில் எனக்கு கவலையில்லை” என போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகள் மற்றும் 82 ரன்கள் எடுத்த ஷகிப் ஆட்ட நாயகன் விருதை வென்றார். போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளாமல் வெவ்வேறு திசைகளில் சென்றனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
