புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது ஆப்கன். இதன் மூலம் இந்த தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது ஆப்கன்.
புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 49.3 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். குசால் மெண்டிஸ் 39 ரன்களும், சதீரா சமரவிக்ரமா 36 ரன்களும் எடுத்தனர். ஆப்கன் பவுலர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி, 10 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.
50 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் விரட்டியது. தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா இணைந்து 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸத்ரான், 39 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஹஷ்மதுல்லா ஷாய்தி மற்றும் ரஹ்மத் ஷா இணைந்து 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹ்மத் ஷா, 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் மற்றும் ஹஷ்மதுல்லா ஷாய்தி இணைந்து 111 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 73 ரன்களும், ஹஷ்மதுல்லா ஷாய்தி 58 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 45.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி உளள்து ஆப்கானிஸ்தான். ஆட்ட நாயகன் விருதை சிறந்த பந்துவீச்சுக்காக ஆப்கன் பவுலர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி பெற்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in