லக்னோ: இங்கிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. உலகக் கோப்பையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை, இந்திய அணி வீழ்த்தியுள்ளது. 230 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து வீழ்த்தியதற்கு ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசியது முக்கிய காரணமாக அமைந்தது.
வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, “பவுலர்களின் மேஜிக் ஸ்பெல்லே இந்த வெற்றிக்கு காரணம். இது மாதிரியான ஸ்கோரை டிஃபென்ட் செய்யும்போது சிறந்த பந்துவீச்சு இது. கள நிலைமைகளை பவுலர்கள் நன்றாக பயன்படுத்தினர். பவுலிங்கில் அணியில் சமநிலை இருக்கிறது. ஸ்பின்னர்களும் சரி, ஃபாஸ்ட் பவுலர்களும் சரி அனுபவத்தை வெளிப்படுத்தினர். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அனைவரும் சரியான நேரத்தில் சரியாக செயல்பட்டனர்.
இந்தத் தொடர் முழுவதுமே இதுவரை இரண்டாவது பேட்டிங் செய்யும் வாய்ப்புதான் கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே முதலில் பேட்டிங் செய்துள்ளோம். சற்று சவாலானதுதான். பிட்ச் பேட்டிங்குக்கு ஏற்றது இல்லை என்று ஏற்கெனவே எங்களுக்குத் தெரியும். ஆனால், பவுலிங்கில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தால் இந்த பிட்ச்சில் ஒரு டீசன்ட்டான ஸ்கோர் எடுக்க வேண்டும் என நினைத்தோம்.
நினைத்ததுபோல் இல்லாமல் எங்களால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முதல் பவர்பிளே முடிவதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழப்பது என்பது சரியான சூழல் அல்ல. தேவையான கட்டத்தில் நானும் ராகுலும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினோம். ஆனாலும், அதன்பின் தொடர் விக்கெட் சரிவு இருந்தது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்தோம்” எனக் கூறினார்.
நன்றி
Publisher: www.hindutamil.in