லக்னோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, இலங்கை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் இலங்கை அணி களம் காண்கிறது.
இந்த லீக் ஆட்டம் லக்னோ மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடைபெற்ற 3 லீக் ஆட்டங்களிலும் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. அனுபவம் குறைந்த அணிகளான நெதர்லாந்து, ஆப் கானிஸ்தான் அணிகள் கூட தலா ஒரு வெற்றியைப் பெற்றுபுள்ளிக் கணக்கைத் தொடங்கியுள்ளன. ஆனால், இலங்கை அணி ஒரு வெற்றியைக்கூட பெற முடியாமல் தவிப்பதுஅந்தஅணியினரை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
நெதர்லாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், கேப்டன் ஸ்காட்எட்வர்ட்ஸ், காலின் அக்கர்மேன், ஆல்-ரவுண்டர் பாஸ் டி லீட் ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர் வான் டெர் மெர்வி அபாரமாக பந்துவீசி எதிரணியினரை மிரட்டி வருகிறார்.
மேலும் பந்துவீச்சில் லோகன் வான் பீக், அக்கர் மேன், பால் வான் மீகெரன் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது.
அதேநேரத்தில் இலங்கை அணி கவலை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. இலங்கையின் பேட்டிங் கைகொடுத்த போதிலும், பந்துவீச்சு சுமாரான வகையில் உள்ளது. பேட்டிங்கின்போது 2 முறை 300 ரன்களை இலங்கை அணி கடந்தது. ஆனால் வெற்றியைப் பெற முடியவில்லை.
இலங்கையின் பதும் நிசங்கா, குஷால் பெரேரா, கேப்டன் குஷால் மெண்டிஸ், சதீராசமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்செய டி சில்வஆகியோர் தங்களது உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும்பட்சத்தில் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறக்கூடும்.
மேலும் பந்துவீச்சில் தில்ஷன் மதுஷங்கா, லஹிரு குமாரா, மகேஷ் தீக்சனா, கருணாரத்னே, துனித் வெல்லலகே ஆகியோர் சிறப்பாக பந்துவீசி எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினால் அந்த அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பும்.
இடம்: லக்னோ
நேரம்: காலை 10.30.
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
நன்றி
Publisher: www.hindutamil.in