புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். அதன்மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி, 259 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் சதம் அடங்கும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கோலி பதிவு செய்த இந்த சதத்துடன் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 78-வது சதங்களை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் இறுதிக்கட்டத்தில் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட, கோலி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது. 97 ரன்களில் இருந்த விராட் கோலி, சதம் அடிக்க வேண்டும் என முனைப்பாக இருந்தார். அதற்காக கேஎல் ராகுல் பேட்டிங் செய்யும் நிலைவந்தபோதும் அதனை மறுத்த அவர் கோலிக்கு சதம் அடிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார்.
அப்போது 42-வது ஓவரை வீசிய வங்கதேச சுழல்பந்துவீச்சாளர் நசும் அகமது, கோலி சதம் அடிக்கும் முயற்சியை தடுக்கும் விதமாக ஓவரின் முதல் பந்தை வைடு டெலிவரியாக வீசினார். இதனால், அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். ஆனால் கள நடுவர் ரிச்சர்ட் கெட்லெபரோ வைடு சிக்கினால் தரவில்லை. இதனால், கூடுதல் ரன்கள் கிடைக்கவில்லை. இறுதியில் அதே ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார் கோலி.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய வீரர் ஷுப்மன் கில், “பவுலர் வேண்டுமென்றே வைடு பாலாக வீச முயற்சித்தாரா அல்லது யதேச்சையாக இது நடந்ததா எனத் தெரியவில்லை” எனக் கூறினார். ஆனால், வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய சான்டோ, “கோலியின் சதத்தை தடுக்க வேண்டும் என எந்த திட்டமும் நாங்கள் செய்யவில்லை. அதற்காக வைடு பால் வீசவில்லை” என விளக்கமளித்தார்.
நன்றி
Publisher: www.hindutamil.in