ODI WC 2023 | சிறப்பான துவக்கம் கொடுத்த வங்கதேச வீரர்கள் – இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு

புனே: புனேவில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்த்து புனேயில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, ஓப்பனிங் செய்த வங்கதேச வீரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் சிறப்பாக துவக்கம் கொடுத்தனர். இக்கூட்டணி முதல் 10 ஓவர்களை கடந்தும் நிலைத்துநின்றது. மெதுவாக தொடங்கினாலும் போக போக ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.

இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் ரன் ரேட் 6-ஐ தாண்டிச் சென்றது. ஆட்டத்தின் 14.4வது ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது இவர்கள் கூட்டணியை குல்தீப் யாதவ் பிரித்தார். முதல் விக்கெட்டாக 51 ரன்கள் எடுத்திருந்த தன்சித் ஹசன் எல்பிடபிள்யு மூலம் அவுட் ஆனார். இதன்பின் வங்கதேசத்தின் இன்றைய கேப்டன் நஜ்முல் சான்டோவை 8 ரன்களில் ஜடேஜா காலி செய்ய, மெஹிதி ஹசன் மிராஸை 3 ரன்னில் சிராஜ் வெளியேற்றினார்.

அதுவரை சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார். இதன்பின் முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களில் விக்கெட்டானார். இன்னிங்சின் இறுதி ஓவர்களில் மஹ்முதுல்லாஹ் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார். அவரின் விக்கெட்டை இறுதி ஓவரில் தனது யார்க்கர் பந்து வீச்சில் பும்ரா வீழ்த்தினார்.

இதன்பின் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

முன்னதாக, இந்தப் போட்டியில் இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசினார் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா. இந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் லிட்டன் தாஸ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 3வது பந்தை வீசும்போது எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட வலியில் சுருண்டு மைதானத்தில் விழ, அணியின் பிசியோ உடனடியாக அவரை சோதித்து பார்த்தார். இதன்பின் பாண்டியாவால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. இதையடுத்து அவர் ஆட்டத்தில் வெளியேறினார்.

பாண்டியாவுக்கு பதிலாக மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசினார். இதனிடையே, பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் அடைந்திருப்பதாகவும், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *