தரம்சாலா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஷாக் கொடுத்துள்ளது நெதர்லாந்து. இத்தகைய சூழலில் இந்த தோல்வி தங்களுக்கு மறக்க முடியாத வேதனையாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அபார செயல்திறனை வெளிப்படுத்தி இருந்தது நெதர்லாந்து. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணி முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்திய சாதனையாகவும் இது அமைந்தது.
“நிச்சயம் இந்த தோல்வி மறக்க முடியாத வேதனையை தந்துள்ளது. இந்த தொடரில் எங்கள் பயணம் இன்னும் முடிவு பெறவில்லை. நிச்சயம் நாங்கள் இதிலிருந்து மீண்டு எழுவோம். ஆட்டம் முழுவதும் நெதர்லாந்து அணியினர் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். அவர்களுக்கு நல்வாழ்த்துகள்” என பவுமா தெரிவித்தார்.
இதற்கு முன்னர் உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே (1999), வங்கதேசம் (2007 மற்றும் 2019) போன்ற அணிகளிடம் தோல்வியை தழுவி உள்ளது தென் ஆப்பிரிக்கா. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவி இருந்தது.
நன்றி
Publisher: www.hindutamil.in