திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் முறைகேடுகளை தடுக்க அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தின் கீழ் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்களில் தினமும் 5,000 பேர், திருவிழாக் காலங்களில் 8,000 பேர் வரை அன்னதானம் சாப்பிடுகின்றனர்.
இத்திட்டத்தில் பல கோயில்களில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, பழநி கோயிலில் அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் நாள், நேரம், டோக்கன் எண், புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண் மற்றும் ஸ்கேன் செய்ய வசதியாக ‘க்யூஆர் கோட்’ இடம் பெற்றுள்ளது. அன்னதானம் சாப்பிட பக்தர்கள் அமர்ந்ததும் அவர்களிடம் கோயில் பணியாளர்கள் டோக்கனை திரும்ப பெற்று, அன்னதானம் சாப்பிடுவோரின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in