ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி விழாவில் சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆனந்த வல்லி அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர்.15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கும் விழா, 24-ம் தேதி அம்பு எய்தலுடன் நிறைவு பெறுகிறது.
நவராத்திரி விழாவின் கடைசி 3 நாட்கள் மலைக் கோயிலில் இரவில் தங்கி பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், விழாவின் கடைசி 3 நாட்களில் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி அளித்த வனத்துறை, அங்கு பக்தர்கள் இரவில் தங்குவதற்கு தடை விதித்தது.
இதைக் கண்டித்து மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன் ஏழூர் சாலியர் சமூக மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நவராத்திரி விழாவின் 11 நாட்களும் மலையேறி வழிபாடு செய்யவும், கடைசி 3 நாட்கள் மலைக் கோயிலில் தங்கி பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று (அக். 13) டிஆர்ஓ தலைமையில் அமைதிக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட் டத்தைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in