“எனது ரசிகர்களை இசை வெளியீட்டு விழாக்களுக்கு அழைக்கமாட்டேன்” – ராகவா லாரன்ஸ்

சென்னை: “எனது படங்களின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன். உங்களுடைய நேரத்தை நான் எடுத்துகொள்ள மாட்டேன். நீங்கள் எந்த ஆடியோ நிகழ்ச்சிக்கும் வர வேண்டாம். அந்தப் பணத்தை அப்பா – அம்மாவுக்கு செலவு செய்யுங்கள். நேரத்தை வேலைக்கு செலவு செய்யுங்கள்” என ரசிகர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் லாரன்ஸ், “ஜிகர்தண்டா படத்தின் சேது கதாபாத்திரம் நான் நடிக்க வேண்டியது. தெலுங்கு படம் நடித்துக்கொண்டிருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை.

தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு ஒருநாள் முழுவதும் அப்செட்டாக இருந்தேன். நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோம்ன்னு ஃபீல் பண்ணேன். படத்தை டிவியில் போட்டால் கூட பாக்கமாட்டேன். அதை பார்த்தால் ஃபீல் பண்ணுவேன் என பார்க்கமாட்டேன். நல்ல வேளை நான் முதல் பாகத்தை மிஸ் செய்ததால், இப்போது இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என இப்போது தோன்றுகிறது. ரூ.20 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை விட ரூ.100 கோடி பட்ஜெட்டில் நடிப்பது பெருமையாக உள்ளது.

என் வாழ்க்கையில் யார், எதெல்லாம் கற்றுகொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் எனக்கு குரு. பாலசந்தர் தான் என்னை அறிமுகப்படுத்தினார். அந்த இடத்தில் தற்போது கார்த்தி சுப்பராஜை வைத்து பார்க்கிறேன். ரஜினியைத்தான் குரு என கூப்பிடுவேன். படத்தின் ட்ரெய்லர் பார்த்த பிறகு அவரை குரு என அழைக்கத் தொடங்கிவிட்டேன். மேக்கப் போட்டு செட்டுக்கு செல்லலாம் என நினைத்துகொண்டிருந்தவரை, ‘கருப்பு தான் அழகு. மேக்கப் வேண்டாம்’ என சொல்லி புரியவைத்தார் கார்த்திக். இப்போது திரையில் பார்க்கும்போது கருப்பின் உன்னதம் புரிகிறது.

ஆங்கிலப் படத்துக்கு இணையாக படத்தை இயக்கியிருக்கார் கார்த்திக் சுப்பராஜ். விஷாலுடன் நடித்து எஸ்.ஜே.சூர்யா சூப்பர் ஹிட் கொடுத்தார். தற்போது என்னுடன் இணைந்து ஹிட் கொடுக்க போகிறார். என்னோட ரசிகர்கள் எல்லோரும் என்னிடம் ‘எங்களை இசைவெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில்லை’ என்று குற்றம் சாட்டுகின்றனர். நான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன்.

உங்களுடைய நேரத்தை நான் எடுத்துகொள்ள மாட்டேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எந்த ஆடியோ நிகழ்ச்சிக்கும் வர வேண்டாம். அந்த பணத்தை அப்பா – அம்மாவுக்கு செலவு செய்யுங்கள். நேரத்தை வேலைக்கு செலவு செய்யுங்கள். நீங்கள் பணம் கொடுத்து படம் பார்ப்பதே எங்களுக்கு செய்யும் பெரும் உதவி. நான் எப்போதும் உங்களை கூப்பிட மாட்டேன். வருத்தப்பட்டாலும் சரி” என்று அவர் பேசினார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *