கடலூர்: நெய்வேலி அருகே உள்ளது பெரியாக்குறிச்சி கிராமம். இப்பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வருகை தந்ததிரைப்பட இசையமைப்பாளர் டி.இமான், பழுதடைந்திருந்த நரிக்குறவர்களின் 5 குடிசை வீடுகளை சரி செய்ய ரூ.2 லட்சம் வழங்கினார். மேலும், மழை பெய்தால் ஒழுகும் நிலையில் இருந்த 3 குடிசைகளுக்கு, தார்பாய் கொண்டு வீட்டின் மேல் பகுதியை மூடவும் உதவி செய்தார்.
கடந்த ஒரு ஆண்டாக இப்பகுதியில் மரத்தடி ஒன்றில் நரிக்குறவர்களுக்காக இந்திரா என்ற ஆசிரியை இரவு பாடசாலை ஒன்றை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடத்தி வருகிறார். இவர் கடலூரில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இமானை இங்கு அழைத்து வந்தவர்கள் இதுபற்றி ஏற்கெனவே கூற, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இமான், அதே பகுதியில் இடத்தை சுத்தம் செய்து, செட் ஒன்றை அமைத்து, இரவு பாட சாலையை அமைத்து கொடுத்தார். “நீங்கள் யார் என்ற அடையாளத்தை மாற்றி, சமூகத்தில் உங்களுக்கு மரியாதையை ஏற்படுத்தி தருவது கல்வி ஒன்றால் மட்டுமே முடியும்” என்று அப்போது அவர் தெரிவித்தார்.
நன்றி
Publisher: www.hindutamil.in