உலகக் கோப்பை நினைவுகள் | 2019-ல் ‘பவுண்டரிகளால்’ இங்கிலாந்துக்கு சாம்பியன் பட்டம்!

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. கடந்த இரு உலகக் கோப்பைகளில் இருந்து 4 அணிகள் குறைக்கப்பட்டு 10 அணிகள் கலந்து கொண்டன.

விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி லீக் சுற்றில் 6 வெற்றி, ஒரு தோல்வி, 2 முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றில் நுழைந்தது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்விகளுடனும் இங்கிலாந்து 6 வெற்றி, 3 தோல்விகளுடனும், நியூஸிலாந்து 5 வெற்றி, 3 தோல்விகளுடனும் (ஒரு முடிவில்லாத ஆட்டம்) அரை இறுதி சுற்றில் கால்பதித்தன. 5-வது முறையாக தொடரை நடத்திய இங்கிலாந்து அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது. மற்றொரு அரை இறுதியில் இந்தியா, நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தது.

240 ரன்கள் இலக்கை இந்திய அணி எளிதாக அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையால் 2வது நாள் தொடர்ந்த ஆட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் கிரீஸின் இம்மியளவு தூரத்தை எட்ட முடியாமல் ரன் அவுட் ஆன தோனி, அதன் பின்னர் இந்திய அணியின் சீருடையை அணியவே இல்லை. அதுவே அவர், இந்தியாவுக்காக களமிறங்கிய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 8 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. 242 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் டை ஆனது. டிரெண்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 2 ரன்கள் ஓடும் முயற்சியில் பென் ஸ்டோக்ஸ் ஈடுபட்டார்.

அப்போது மார்ட்டின் கப்தில் செய்த த்ரோ பென் ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 6 ரன்கள் கிடைத்தன. இருப்பினும் அடுத்த இரு பந்துகளிலும் தலா ஒரு ரன் சேர்க்கப்பட்ட நிலையில் எஞ்சிய இரு விக்கெட்களையும் இங்கிலாந்து இழந்தது. வெற்றியை தீர்மானிக்க வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியும் 15 ரன்கள் சேர்க்க ஆட்டம் மீண்டும் டை ஆனது.

எனினும் அதிக பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்த எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து 22 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசியிருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்திருந்தது. பவுண்டரிகள் எண்ணிக்கையின் மூலம் வரலாற்றில் முதன்முறையாக மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த பென் ஸ்டோக்ஸ் 98 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசி இருந்தார். இறுதிப் போட்டி 9 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றிருந்தது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *