கொழும்பு: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இலங்கையில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தகவல். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நாளை இலங்கையில் நடைபெறும் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் விளையாட உள்ளன.
இந்நிலையில், இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவர் காயத்திலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மாற்றாக ஆடும் லெவனில் முகமது ஷமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்னர் பும்ரா, அணியுடன் இணைவார் என தகவல்.
பும்ரா – சஞ்சனா கணேசன் தம்பதியர் தங்களது முதல் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கி உள்ளனர். அதன் காரணமாக பும்ரா, மும்பை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்றுப் போட்டி மழையால் ரத்தானது.
நன்றி
Publisher: www.hindutamil.in