"ஈட்டி எறிதலுக்கு எல்லையே கிடையாது" – மனம் திறக்கும் நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதலுக்கு எல்லையே கிடையாது என உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஈட்டி எறிதலில் உலக அரங்கில் உள்ள அனைத்து பட்டங்களையும் வென்று பிரம்மிக்க வைத்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, டைமண்ட் லீக் தொடர்களில் 4 முறை பட்டம், டைமண்ட் லீக் சாம்பியன்ஸ் டிராபி என நீரஜ் சோப்ராவின் தங்க வேட்டை தொடர்கிறது.

வழக்கமாக ஈட்டி எறிதலில் ஜெர்மனி, பின்லாந்து, அமெரிக்கா வீரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த வரலாற்றை கடந்த சில வருடங்களாக மாற்றி எழுதி வருகிறார் நீரஜ் சோப்ரா. அவரது கையில் இருந்துபாயும் ஈட்டி தங்கத்தை வேட்டையாடுவதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டுள்ளதோ என்ற எண்ணத் தோன்றுகிறது. ஹங்கேரியில் வரலாற்று சாதனை படைத்த பின்னர் நீரஜ் சோப்ராவிடம், அனைத்து பட்டங்களையும் நீங்கள் வென்றுவிட்டீர்கள், இனிமேல் அடைய வேண்டியது என்ன? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர், கூறியதாவது:

‘ஈட்டி எறிபவர்களுக்கு ஃபினிஷிங் லைன் இல்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. எப்பொழுதும் நம்மை நாமேதான் முன்னேற்றிக் கொண்டு செல்ல முடியும். நான் நிறைய பதக்கங்களை வென்றிருக்கலாம். ஆனால் இன்னும் அதிக தூரம் எறிவதே உந்துதலாக உள்ளது. இந்தப் பதக்கங்களை வென்றதன் மூலம், நான் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன் என்று நினைக்கக் கூடாது. நான் கடினமாக உழைக்கிறேன். பதக்கங்களை வெல்வதற்கும், என் நாட்டிற்கு அதிக விருதுகளை கொண்டு வருவதற்கும் கடினமாக உழைக்கிறேன். அடுத்த முறை மற்ற இந்திய வீரர்கள் என்னுடன் மேடையில் இணைந்தால், அது சிறப்பாக இருக்கும்.

இந்த வருடம் 90 மீட்டர் தூரம் வீசுவேன் என்று நினைத்தேன். ஆனால் இடையில் இடுப்பு காயம் வந்து சிக்கலை உருவாக்கியது. கடந்த ஆண்டு 90 மீட்டருக்கு மிக அருகில் எறிந்தேன். 90 மீட்டர் தூரத்தை ஒருநாள் எட்டுவேன். அது எப்போது நிகழும் என்று தெரியவில்லை. ஆனால் அதற்காக அழுத்தத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

பதக்கம் வெல்வது முக்கியமானதுதான். எனினும் தொடர்ச்சியாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். இது பெரிய அளவிலான போட்டிகளில் நம்பிக்கையை அளிக்கிறது. நான் 90 மீட்டரை எட்டியதும், அதை சீராக வைத்திருக்க முயற்சிப்பேன். கடினமாக உழைத்து, அந்த தூரத்தை எப்போதும் அடைவோம் என காத்திருக்கிறேன்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது சிறப்பான விஷயம். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு உண்மையிலேயே உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற விரும்பினேன். இது எனது கனவாகவும் இருந்தது. இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த சாம்பியன்ஷிப் ஆகும், மேலும் எனது நாட்டிற்கு மற்றொரு பட்டத்தை கொண்டு வந்ததில் நான் பெருமைப்படுகிறேன். தற்போது 90 மீட்டர் தூரத்தை எட்ட முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை இது நிகழலாம்.

நான் போட்டிக்கு முன் செல்போனை அதிகம் பயன்படுத்துவதில்லை. போட்டி முடிவடைந்து பார்க்கும்போது இந்தியா – பாகிஸ்தான் மோதல் என எல்லா இடங்களிலும் பார்த்தேன். நம் நாட்டில் எப்போதும் இந்த இந்தியா-பாகிஸ்தான் விஷயம்உள்ளது, அது போட்டிக்கு நல்லது, ஆனால் உலகளாவிய நிகழ்வுகளில் ஒவ்வொரு போட்டியாளரின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

நீங்கள் ஐரோப்பிய விளையாட்டு வீரர்களைப் பார்த்தால், அவர்கள் மிகவும் கடினமானவர்கள், அவர்கள் எந்த நேரத்திலும் எதையும் செய்ய முடியும். அர்ஷத் மட்டுமல்ல, ஜக்குப் வட்லெஜும் (செக் குடியரசின் வெண்கலம் வென்றவர்) சிறந்த வீரர். கடைசி வாய்ப்பு வரை ஒவ்வொரு வீரர் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

முன்பு ஐரோப்பியர்கள் அதிகளவில் ஈட்டி எறிதலில் சிறப்பாகச் செயல்பட்டனர், ஆனால் இப்போது நாங்கள் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு பதக்கம் வெல்வது நம் இரு நாடுகளுக்கும் நல்லது. மக்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது அழுத்தத்தை உருவாக்குவார்கள். ஆனால் எனது அணுகுமுறை ’எளிதாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் மற்றும் உங்களை நம்புங்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *