திரை விமர்சனம்: கிங் ஆஃப் கொத்தா

ரவுடிகள் ஆட்டிப்படைக்கும் கொத்தை என்ற ஊருக்கு வருகிறார், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரி ஷாகுல் (பிரசன்னா). அங்கிருக்கும் பிரபல கேங்ஸ்டர் கண்ணன் பாயை (ஷபீர் கல்லாரக்கல்) ‘அவன் ரொம்ப மோசமானவன்’ என்கிறார்கள் போலீஸார். ‘யாராக இருந்தாலும் பார்க்கலாம்’ என்று அவன் இடத்துக்கே சென்று மிரட்டுகிறார் ஷாகுல். போன பிறகுதான் தெரிகிறது, நிஜமாகவே மோசமானவன் என்று. அதிர்ச்சி அடையும் ஷாகுலுக்கு, கொத்தையில் ஏற்கெனவே ‘நல்ல’ தாதாவாக இருந்த ராஜு பாய் (துல்கர் சல்மான்) பற்றி தெரியவருகிறது. முள்ளை முள்ளால் எடுக்கத் திட்டமிடுகிறார் ஷாகுல். அவர் திட்டம் நிறைவேறியதா? கண்ணன் பாய்க்கும் ராஜு பாய்க்கும் என்ன தொடர்பு? அவரை ராஜு எப்படி முடிக்கிறார் என்பதுதான் படம்.

பான்- இந்தியா ஆசையில், பழைய ‘மாஸ் ஆக்‌ஷன்’பார்முலா கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி. ஒரு கேங்ஸ்டர் கதையில் என்னவெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் அச்சுப் பிசகாமல் அப்படியே இருக்கிறது இதிலும். சில காட்சிகளில் சுவாரஸ்யம் இருந்தாலும் அடுத்தது இதுதான் என்பதை எளிதாக கணித்துவிட முடிகிற பலவீனமான திரைக்கதை படத்தின் பெருங்குறை.

ஹீரோவுக்கும் வில்லனுக்குமான நட்பு, ஒரு கட்டத்தில் துரோகியாகும் நண்பன், ஆங்கிலம் பேசும் மற்றொரு வில்லன் ரஞ்சித் (செம்பன் வினோத்), அப்படி பேசுவதற்கான கதை, ஹீரோ ரவுடி ஆவதற்கான பின்னணி, ஹீரோவின் தங்கையைக் காதலிக்கும் மற்றொரு ரவுடியின் ‘டிரக் அடிக்ட்’ மச்சான் என படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் கதை இருக்கிறது. ஹீரோவுக்கானதாக மட்டுமல்லாமல் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கும் திரை எழுத்தை (அபிலாஷ் என்.சந்திரன்) பாராட்டினாலும் கிளைக்கதைகளில் ஏகப்பட்டச் சிக்கல்கள்.

ஆயிரம் பேர் வந்தாலும் வெட்டிச்சாய்க்கும் ஹீரோ, தான் காதலிக்கும் பெண்ணுக்குப் பிடிக்காது என்பதற்காக போதைப்பொருள் விற்பனைக்கு மட்டும் எதிரானவர் என்பதை ஏற்க முடியவில்லை. இதுதான் நண்பர்களுக்குள் (துல்கர் -ஷபீர்) பிரிவை ஏற்படுத்தும் முடிச்சு என்பதால் அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் முதல் பாதி தரும் ‘பில்டப்’பை, இரண்டாம் பாதி ‘டிராமா’ கொஞ்சம் தீர்த்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால், படத்தின் நீளம் அந்த ஆறுதலிலும் அக்னி வீசிப் போவது ஏமாற்றம். பெரும்பாலான காட்சிகளில் வில்லன், ஹீரோ கேங், மது, சிகரெட் குடித்துக்கொண்டு யாரையாவது வெட்டி சாய்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சாக்லேட் பாய் துல்கர் சல்மான், ஆக்‌ஷன் ஹீரோ ஆவதற்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது இந்தப் படம். அவரது தோற்றமும் இயல்பான உடல் மொழியும் கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை அளிக்கிறது. ஷபீர் கல்லாரக்கல், கண்ணன் பாயாக சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு அதிக வேலை இல்லை என்றாலும் முதலில் பயந்துகொண்டே துல்கரை காதலிப்பதான காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். ஆங்கிலம் பேசியபடி வில்லத்தனம் செய்யும் செம்பன் வினோத், சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். துல்கரின் தந்தை ஷம்மி திலகன், தங்கை அனிகா, ஷபீரின் மனைவி நைலா உஷா உட்பட துணை கதாபாத்திரங்கள் தங்கள் கேரக்டருக்கு வலு சேர்க்கிறார்கள்.

படத்தின் குறைகள் பார்வையாளனுக்கு அதிகம் தெரிந்துவிடாமல் பாதுகாக்கின்றன, கையாளப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள். மனோஜின் கலை இயக்கம், நிமிஷின் ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் ஒரு பீரியட் படத்துக்கான கடமையைக் கச்சிதமாகச் செய்திருக்கின்றன. ஜேம்ஸ் பிஜோயின் அட்டகாசமான பின்னணி இசை 80 மற்றும் 90-களின் காலத்தை கண்முன் கொண்டு வருகிறது. படத்தின் நீளத்தை இரக்கமின்றி குறைத்திருந்தால், இந்த கேங்ஸ்டர் மோதலை இன்னும் ரசித்திருக்கலாம்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *