டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.
இந்நிலையில், கடைசி மற்றும் 3-வது ஆட்டம் டப்ளின் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்தப் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தொடர் நாயகன் விருதை கேப்டன் பும்ரா பெற்றார். வெற்றிக் கோப்பையை பெற்ற அவர், அதனை இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் வசம் கொடுத்து அழகு பார்த்தார். அடுத்ததாக இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
முன்னதாக, சந்திரயான்-3 நிலவில் தரை இறங்குவதை, இந்திய கிரிக்கெட் அணியினர் நேற்று டப்பிளின் மைதானத்தில் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நன்றி
Publisher: www.hindutamil.in