கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி சீன தைபேவின் சாங் சிங் ஹுய், யங் சிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காயத்ரி, ட்ரீசா ஜோடி 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் இந்திய ஜோடி போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் ஷென் குயிங், ஜியா யி ஃபேன் ஜோடியை எதிர்கொள்கிறது.
முன்னதாக நேற்று முன்தினம் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 14-21, 14-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் நோசோமி ஒகுஹராவிடம் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 9-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் 21-9, 21-14 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் சிகோ அவுரா வார்டோயோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-9 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் கென்னத் ஹீ ஹோய் ஹூ, மிங் ஹியூன் லிம் ஜோடியை தோற்கடித்தது.
நன்றி
Publisher: www.hindutamil.in