
ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சின்னப் பாத்திரத்தில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவராஜ்குமார். ஜெயிலர் திரைப்படம் குறித்தும், திரைப்படங்கள் குறித்த தனது பார்வைகளையும், தமிழ்த் திரையுலகம் குறித்தும் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. ஜெயிலர் படத்தில் ஒரு சின்னப் பாத்திரத்தில் நடித்திருந்தீர்கள். அதற்குக் கிடைத்த வரவேற்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப. நிஜமாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஒரு சின்ன பாத்திரம்தான் என்று சொன்னார். நான் விஜய் மில்டனின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். கடுகு என்ற படத்தை ரீ – மேக் செய்துகொண்டிருந்தோம். ரயில் தொடர்பான ஒரு காட்சியை எடுப்பதற்காக அங்கே வந்தோம்.
அப்போது பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கும் நடந்துகொண்டிருந்தது. விஜய்யைப் பார்க்கலாம் என்று போனேன். அப்போதுதான் நெல்சன் என்னைப் பார்த்தார். அப்போது லேசாகத் தாடியெல்லாம் இருந்தது. ரொம்பவும் ஈர்க்கப்பட்டுவிட்டார் போலிருக்கிறது. “யார் இது, இப்படியிருக்கிறார். இவரோடு ஏதாவது படம் செய்யனும்” என்று நினைத்திருக்கிறார்.
அப்போதுதான் ஜெயிலர் படத்திற்கான கதையை எழுதிக்கொண்டிருந்தார். அதில் எனக்காக ஒரு பாத்திரத்தை உருவாக்கினார். ஒரு சின்ன பாத்திரம்தான். ரஜினியிடம் சொன்னேன். அவர் உங்களிடம் பேசச் சொன்னார். இரண்டு சீன்கள்தான் வருவதுபோல காட்சி. முதல் பாதியில் ஒரு முறையும் இரண்டாவது பாதியில் ஒரு முறையும் வரும் என்று சொன்னார்.
கதையே சொல்ல வேண்டாம். கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இருந்தாலும் டான்ஸ்ட் கர்நாடகா டான்ஸ் ஷோவில் நான் இருந்தபோது வந்து கதையைச் சொன்னார். சின்ன பாத்திரம்தான்.

பட மூலாதாரம், TWITTER/SUN PICTURES
ஆனால், கடந்த ஆறேழு நாட்களாக என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தமிழ்நாடு மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? கன்னடத்தில் எனக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. அதனால் விரும்புகிறார்கள், சரி. ஆனால், தமிழில் வெறும் இரண்டு காட்சிக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுகிறார்கள். அமெரிக்கா, துபாயிலிருந்து, ஆஸ்திரேலியாவில் இருந்துகூட போன் செய்கிறார்கள். அவர்களை எது கவர்ந்தது எனத் தெரியவில்லை.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இம்மாதிரியான பாராட்டுகளை யாருக்குத்தான் பிடிக்காது? இங்கே திரையரங்குக்குப் போனாலும் எல்லோரும் பிடித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். சமூகவலைதளங்களில் இதே டாபிக்காக இருக்கிறது. எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நெல்சன், கலாநிதி மாறன், ரஜினி ஆகியோருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
கே. நீங்கள் கன்னடத்தில் ஒரு சூப்பர் ஸ்டார். ஜெயிலர் படத்தில் ஒரு சின்ன பாத்திரம்தான். அப்படியிருக்கும் அதில் நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி?
ப. என்னை நானே புதுப்பித்துக்கொள்ள விரும்பினேன். புதிதாக ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற ஒரு ஆசை கிடையாது. இப்போது எல்லாமே Pan – India படங்களாகிவிட்டன. வேதா தமிழில் வெளியானது. தமிழகத்திலும் ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல விமர்சனங்கள் வெளிவந்தன. Zee 5 ஓடிடியில் வெளியானபோது, அது ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு வெற்றிபெற்றது. குறைந்த காலத்தில் லட்சக்கணக்கானவர்கள் அந்தப் படத்தைப் பார்த்தார்கள்.
தெலுங்கில் பாலய்யா எனக்கு சகோதரரைப் போல. அவர் அழைத்தார் என்பதால் தெலுங்கில் வெளிவந்த சாதகர்ணி படத்தில் ஒரு பாட்டு நடித்துக்கொடுத்தேன். அதைத் தவிர்த்து வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை. இப்போது கிடைக்கும் பாராட்டுகளைப் பார்த்தால், நான் இப்போதுதான் புதிதாக திரையுலகிற்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது. ஆச்சரியம் தரும் விதத்தில் இது நடந்திருக்கிறது.

கே. ஜெயிலர் படத்தில் இரண்டு காட்சிகளே வந்தாலும் அது ரஜினியோடு வருவது போலத்தான் இருந்தது. ரஜினிகாந்தோடு பணிபுரிந்த அனுபவம் எப்படியிருந்தது..
ப. எனக்கு ரஜினிகாந்தை சின்னவயதிலிருந்தே தெரியும். அவரும் பெங்களூரைச் சேர்ந்தவர். அவருடைய பாணி கவர்ச்சிகரமானது. அவர் எவ்வளவு சிரமப்பட்டு மேலே வந்தார் என்பது தெரியும். கமலுடன் இணைந்து மூன்று முடிச்சு படத்தில் நடித்தார். தப்புத் தாளங்கள், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, புவனா ஒரு கேள்விக்குறி என அவர் தொடர்ந்து மாறிவந்தார். படையப்பா, சிவாஜி என மிகப் பெரிய உயரங்களைச் சென்றடைந்தார்.
எனக்கு அவரோடு நல்ல பழக்கம் உண்டு. எனது தந்தைக்கும் குடும்பத்திற்கும் மிக நெருக்கமானவராக இருந்தார். அவ்வப்போது தந்தையோடு நடைபயிற்சி போவார். நேரம் செலவழிப்பார். அவருடைய படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அழைப்பார். வீரப்பன் விவகாரம் நடந்தபோது நாங்கள் மிகவும் நெருக்கமானோம்.
எந்தக் குடும்ப நிகழ்வு நடந்தாலும் ரஜினியும் சிரஞ்சீவியும் கண்டிப்பாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களைப் போல இருப்பார்கள்.
நான் நடிக்கவந்து 37 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதால், தயக்கம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு மரியாதை இருந்தது. என்னுடைய தந்தையின் சகோதரரைப் போல கருதினேன். ஆனால், அவர் ரொம்பவும் சாதாரணமாக இருப்பார். இந்த 73 வயதிலும் ஓடுகிறார். நடிக்கிறார். எப்போதுமே சும்மா இருந்ததில்லை. இதெல்லாம் மிகவும் ஈர்த்தது.
பழைய விஷயங்களையெல்லாம் சொல்லும்போது, ரொம்பவும் ஆர்வமாகக் கேட்பார். எப்படி இதெல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டார். மொத்தம் நான்கு நாட்கள்தான் எனக்கு ஷூட்டிங். ரொம்பவும் மகிழ்ச்சியுடன் அதை நடித்தேன். ஆனால், அது அவரோடு 400 நாட்கள் நடித்ததைப் போல இருந்தது.

பட மூலாதாரம், TWITTER/DrSHIVARAJKUMAR
கே. கன்னடத்தில் உங்களுக்கு ஒரு இமேஜ் இருக்கிறது. உங்கள் படங்களில் வன்முறை இருந்தாலும், அதற்கான நியாயங்களும் இருக்கும். ஜெயிலர் படத்தில் ஒருவரை பேனில் கட்டி தொங்கவிடுவதைப் போன்ற காட்சி வருகிறது. அது உங்கள் இமேஜைப் பாதிக்கும் என்ற யோசனை வரவில்லையா?
ப. நம்மைத் தேடி யார் வந்தாலும் ஒரு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் நல்லவர்களாக இருக்கலாம், கெட்டவர்களாக இருக்கலாம். நாம் பேசும்போது ஒரு பணிவு இருக்க வேண்டும். என்ன வேலை செய்தாலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.
சிலர் இருப்பார்கள், முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க எதையாவது செய்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது. யாராவது வந்தால் விசாரிக்க வேண்டும். ஒருவர் வந்தவுடனே கத்தியைத் தூக்கினால் எப்படி? தவிர, அந்தப் பாத்திரத்திற்கு ஜெயிலரோடு நல்ல தொடர்பு இருக்கும். அதெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அந்த அடியாள் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
ரஜினிகூட சொல்வார். “விட்டுடுப்பா தெரியாமல் பண்ணிட்டான்” என்பார். “எப்படி சார் தெரியாமல் பண்ணுவான். தெரிஞ்சுக்கனும்ல..ஒரு பணிவு வேண்டாமா?” அதுக்குதான் அந்த தண்டனை.
கே. உங்களுடைய பின்னணி, நீங்கள் சென்னையில் வளர்ந்தது போன்றவற்றைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ப. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சகோதரர்கள் ஐந்து பேருமே சென்னையில்தான் பிறந்தோம். என் தந்தையின் உண்மையான பெயர் முத்துராஜ். 1951 – 52ல் என் தாயை திருமணம் செய்துகொண்டார். என் தந்தையின் தந்தை அந்த சமயத்தில் இறந்துவிட்டார். அப்போது தந்தை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் வாய்ப்புத் தேடி குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்தார்.
அப்போது பேதர கண்ணப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் அளித்தார். எச்.எல்.என். சிம்ஹாதான் படத்தை இயக்கினார். தந்தையின் பெயரைக் கேட்டபோது, அவர் முத்துராஜ் என்று சொல்வார். உடனே, அதிலிருந்த ராஜ் என்ற வார்த்தையுடன் குமாரைச் சேர்ந்து ராஜ்குமார் எனப் பெயரை மாற்றினார். அப்படித்தான் அவர் ராஜ்குமார் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட்டானது. இருந்தாலும் போராட்டம் இருந்தது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தார்.
அவர் முப்பது – நாற்பது படங்கள் நடித்த பிறகுதான் நான் பிறந்தேன். அவருக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. பிறகுதான் நான் பிறந்தேன். பிறகு ஒவ்வொரு சகோதர, சகோதரிகளாகப் பிறந்தார்கள். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பனகல் பார்க்கில் இருந்த ஒரு அகாதெமியில்தான் குச்சுபிடி கற்றுக்கொண்டேன். தமிழ் நண்பர்கள்தான் அதிகம் இருந்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
2017ஆம் ஆண்டு, தந்தை ராஜ்குமாரின் 88வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது மகன்கள் புனித் ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், சிவராஜ்குமார்.
கே. நீங்கள் பிறந்துவளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் எனும்போது, நடிப்பதற்கு கன்னடத் திரையுலகைத் தேர்வுசெய்தது ஏன்?
ப. எனக்கு முதலில் வாய்ப்பு வந்தது மலையாளத்தில்தான். 1981-82ல் அந்த வாய்ப்பு வந்தது. நண்பர்கள் எல்லாம் ஊக்குவித்தார்கள். “ஹீரோ ஆகப்போற மச்சான்” என்று கலாட்டா செய்தார்கள். பிறகு வீட்டிற்கே வந்து தயாரிப்பாளர்கள் கேட்டார்கள். அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு அப்படி ஒரு ஆசை இருந்தால், முதலில் கன்னடப் படத்தில் நடிக்கலாம் என்றார். இருந்தாலும் முதலில் படிப்பை முடித்துவிடு என்றார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு திரைப்படக் கல்லூரிக்குப் போகச் சொன்னார். அதன்படியே செய்தேன்.
திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தன. தமிழ், தெலுங்கு, இந்திப்பட வாய்ப்புகளும் வந்தன.
கே. உங்கள் தந்தையார் கன்னட படங்களைத் தவிர வேறு மொழி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.. அதனால்தான் முதன் முதலில் கன்னடப் படத்தைத் தேர்வுசெய்தீர்களா?
ப. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவர் வேறு மொழிப் படங்களில் நடிக்கவில்லையே தவிர, அவருடைய படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும். நான் நிறைய தமிழ், இந்திப் படங்களைப் பார்த்துத்தான் வளர்ந்தேன்.
சென்னையில் உள்ள உட்லாண்ட்ஸ் தியேட்டரில் கன்னடப் படங்களைத் திரையிடுவார்கள். அப்போது அவற்றையும் பார்ப்பேன்.
கே. ராஜ்குமார் தனது பாத்திரம் குறித்து மிகக் கவனமாக இருப்பார். சிகரெட் குடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்ப்பார். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை. உங்கள் தந்தை ஏதும் சொல்லவில்லையா?
ப. ஓம் படத்தில்தான் அப்படி ஆரம்பித்தேன். சரி, இந்தக் காலத்திற்கு ஏற்றதுபோல மாற்றக்கொள்ள வேண்டியதுதான் என்றார் அப்பா. எல்லோரும் என்னைப் போலவே இருக்க வேண்டியதில்லை என்றார். திரைப்படங்களிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி இப்படிச் செய், அப்படிச் செய் என்றெல்லாம் அவர் கட்டுப்பாடுகளை விதிக்கமாட்டார். எங்கே போகிறேன், வருகிறேன் என்றெல்லாம் கேள்விகேட்பதெல்லாம் அவரிடம் கிடையாது.
கே. நீங்கள் திரையுலகிற்கு வரும்போது, யாருடைய தாக்கம் உங்கள் மீது இருந்தது? உங்கள் தந்தையின் பாதிப்பு இருந்ததா?
ப. சத்தியமாக யாருடைய தாக்கமும் இல்லை. எனக்கு கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். நான் ஏன் ரசிகர்களை எளிதில் புரிந்துகொள்கிறேன் என்றால், நானே ஒரு ரசிகன். மிகப் பெரிய ரசிகன். கமல்ஹாசனின் படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்க்கனும். இல்லாவிட்டார் பார்க்கவே மாட்டேன். பிறகு, பாலச்சந்தர், பாக்கியராஜ் ஆகியோரின் படங்கள் வந்தால் பார்த்துவிட வேண்டும் என நினைப்பேன்.
கமல் படங்கள் தவிர, அமிதாப் பச்சன் படங்களையும் முதல் காட்சி பார்க்க வேண்டும். மற்ற ரசிகர்கள் கமல் படங்களை நன்றாக இல்லை என்று சொன்னால் கோபம் வந்துவிடும். அவர்களோடு பேசமாட்டேன். எந்தப் படத்தையும் நல்லா இல்லை என்று சொல்ல மாட்டேன். நன்றாக இல்லாவிட்டாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்வேன். அந்த அளவுக்கு ரசிகனாக இருந்தேன்.

கே. கமல்ஹாசனை எப்போது முதன் முதலில் சந்தித்தீர்கள்…
ப. ஏவிஎம் ஸ்டுடியோவில் சில முறை பார்த்திருக்கிறேன். பிறகு ஒரு முறை என் தந்தையைப் பார்க்க வந்தார். அவரை நான் பார்த்துக்கொண்டேயிருந்தேன். தந்தை அறிமுகப்படுத்திவைத்தார். நான் அவரிடம், ஒரே ஒரு முறை கட்டிப்பிடிக்கட்டுமா என்று கேட்டு, கட்டிப்பிடித்தேன். அதற்கு பிறகு மூன்று நாட்கள் குளிக்கவேயில்லை. நீங்கள் இதையெல்லாம் நம்ப மாட்டீர்கள். அம்மா சத்தியமாக சொல்கிறேன்.
கமல் மிகப் பெரிய அழகன். நல்ல கண்கள். அவற்றையெல்லாம் ரசிப்பேன். ஆனால், அவரைப்போலவே நடிக்க முயற்சிக்க மாட்டேன்.
கே. உங்கள் தந்தையார் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட சமயத்தில் ரஜினியின் ஆதரவு என்னவாக இருந்தது?
ப. அவர் அந்தத் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். தைரியம் சொன்னார். “ஒன்றும் ஆகாது, வந்துவிடுவார்” என்று ஆறுதல் சொல்வார். அவர் வீட்டுக்கு அருகில் இருந்த சோழா ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். ‘ஹோட்டலில் வாங்கி சாப்பிடாதீர்கள்” என்று சொல்லி அவர் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்புவார். சாயங்காலம் எங்கள் வீட்டுக்கு வாருங்கள். காபி குடிக்கலாம் என்பார். பிறகு பேசிக்கொண்டேயிருப்பார். இரண்டு அரசுகளோடும் பேசினார்.
அந்தத் தருணத்தில் இரண்டு மாநிலங்களிலும் ஆதரவு இருந்தது. அவர் தவிர, கமல், சத்யராஜ், அர்ஜுன், முரளி போன்ற எல்லோருமே ஆதரவு அளித்தார்கள். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் ஆதரவு அளித்தார்கள்.

கே. உங்களுடைய வேதா திரைப்படம் சமீபத்தில் தமிழிலும் வெளியானது. என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்தன?
ப. நல்ல விமர்சனங்கள் வந்தன. அந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோவுக்குக் கொடுத்திருந்தோம். ஆனால், பெரிய அளவில் அவர்கள் விளம்பரம் செய்யவில்லை. நான் வருகிறேன், எனக்கு சென்னையில் நிறையப் பேரைத் தெரியும் என்றெல்லாம் சொன்னேன். ஆனால், அது சரியாக இல்லை.
எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் என்றார்கள். ஆனால், தெலுங்கில் 50 நாட்களுக்குப் பிறகு தாமதமாக ரிலீஸானது. அடுத்த நாளே ஓடிடியில் வெளியானது. படம் ஓடிடியில் வெளியான பிறகும் பெங்களூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 75 நாட்கள் ஓடியது. மூன்று திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. இந்த காலகட்டத்தில் 100 நாட்கள் ஓடுவதெல்லாம் கடினம்.
கே. கடந்த சில ஆண்டுகளில் கன்னடப் படங்கள் நிறைய ‘பான் – இந்திய’ படங்களைத் தர ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றம் எப்படி நடந்தது?
ப. ஏதோ மேஜிக் நடக்கிறது. ஜெயிலரில் 2 சீன்கள்தான் நடித்தேன். சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிறது. பணம் கொடுத்து அதைச் செய்ய முடியுமா? ஆகவே கன்னடத் திரையுலகில் கேஜிஎஃப், காந்தாரா, வேதா, சார்லி போன்ற சில நல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றன.

பட மூலாதாரம், SATHYA JOTHI FILMS
கே. கேப்டன் மில்லரில் தனுஷுடன் நடிக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது..
ப. மிகச் சிறப்பாக இருக்கிறது. எனக்கு தனுஷை ரொம்பவும் பிடிக்கும். அவரிடம் ஒரு ‘ஸ்பார்க்’ இருக்கிறது. நம்ம பையன் எனத் தோன்றும். அந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோல். ஜெயிலரைவிட கூடுதல் நேரம் வருவேன். சுவாரஸ்யமான படம்.
கே. அடுத்ததாக தமிழில் வேறு என்ன படங்களில் நடிக்கிறீர்கள்…
ப. இரண்டு படங்கள் வந்திருக்கின்றன. ஒன்று பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படம். இன்னொரு படம் தேனப்பன் தயாரிப்பில் நடிக்கிறேன்.
கே. தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
ப. தெரியவில்லை. என்னவருமோ, நான் எதையும் திட்டமிடுவதில்லை. வாய்ப்புகள் வந்தால் அதை உண்மையாகச் செய்ய வேண்டும். மக்கள் அங்கீகரிக்கும் வகையில் செய்ய வேண்டும். ஜெயிலரில் மக்கள் ஒரு சிறிய அங்கீகாரத்தை தந்திருக்கிறார்கள். இரு காட்சிகளுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் யாருக்கும் கிடைக்காது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்