தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கோவை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்க தலைவர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக உயர்கல்விமன்றம் தயாரித்துள்ள பொதுப் பாடத்திட்டத்தை, அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருப்பதோடு, “பொதுப்பாடத்திட்டம், தற்போது கல்லுாரிகள் பின்பற்றும் பாடத்திட்டத்தை விட பின்தங்கிய நிலையிலும், தரமான கல்வியில் சமரசம் செய்து கொள்வதாகவும் உள்ளது” என கவலை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “உயர்கல்வியானது, மத்திய அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி.,யிடம், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் பெறப்பட்டது. இதற்கு, யு.ஜி.சி., தெளிவான விளக்கம் அளித்துள்ளது. ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள், யு.ஜி.சி. விதிகளை பின்பற்றி, தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கவும், உரிய காலத்தில் புதுப்பிக்கவும் செய்யலாம்’ என கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுப்பாடத் திட்டம் குறித்து, எந்த சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல், பல்கலக்கழகங்களும், தன்னாட்சி கல்லூரிகளும், நீங்களே உரிய சட்ட அமைப்புகளின் வழியே, பாடத்திட்டத்தை வடிவமைத்து பின்பற்றலாம். தமிழக உயர்கல்வி மன்றம் தயாரித்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்துடன், ஆளுநர் ரவிக்கு யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ்குமார் எழுதியுள்ள கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com