அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு `புரட்சித்தமிழர்’ பட்டம் வழங்கியதை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “புரட்சித்தலைவர் சத்துணவு திட்டம் தந்து சரித்திரம் படைத்தார். புரட்சித்தலைவி, அம்மா உணவகம் உட்பட பல்வேறு திட்டங்களைத் தந்தார். அதே வரிசையில் பல்வேறு திட்டங்களைத் தந்ததால் எடப்பாடியாருக்கு `புரட்சித்தமிழர்’ பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. தொண்டர்கள் 30 கிலோமீட்டர் தூரம் வரை காத்திருந்து மாநாட்டுக்கு வந்தனர். அ.தி.மு.க மாநாடு மதுரை மண்ணுக்குப் பெருமையாக அமைந்திருக்கிறது.

மாநாட்டில் அ.தி.மு.க கொடியேற்றிய எடப்பாடியார், விரைவில் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவார். எடப்பாடி பழனிசாமிதான் மக்களைக் காப்பார் என 8 கோடி தமிழக மக்களும் நினைக்கிறார்கள். கண் இருந்தும் குருடர்கள்போல, சில நயவஞ்சகர்கள், `எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார்?’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள். அவர் செய்த வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்களுக்குத் தெரியும்.
மாநாட்டுக்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. மதுரை மாவட்டக் காவல்துறை காழ்ப்புணர்வுடன் செயல்பட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், காவல்துறை மாநாட்டுக்கு வந்த அ.தி.மு.க தொண்டர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறது. அந்தத் தடைகளைத் தாண்டி, அ.தி.மு.க தொண்டர்கள் வந்திருக்கின்றனர்.

மாநாடு முடிந்த பின்னர் சமையல் பாத்திரங்களை எடுத்துச் செல்வதற்காக வந்தவர்களால், மீதமிருந்த உணவுகள் கொட்டப்பட்டு சிதறிக் கிடந்தது மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையினரின் குளறுபடியால் 35 லட்சம் பேர் வர முடியாததால் உணவு மீதமானது. மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள் அதை மறைக்க, புளியோதரை மீதமானதை மிகைப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தொண்டர்கள் அதிக அளவில் வருவார்கள் என அதிகமாக உணவு சமைக்கப்பட்டதன் காரணமாகவே உணவு மிஞ்சியது. உணவு மீதமானது குறித்து விசாரணை நடத்தியும் வருகிறோம். நீட் எதிர்ப்புக் கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். `ஆட்சிக்கு வந்தால் நீட் ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்’ எனச் சொன்ன உதயநிதி, இப்போது `ராகுல் ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்துசெய்ய நடவடிக்கை எடுப்போம்’ என்கிறார். உதயநிதி இரட்டை வேடம் போடுகிறார்.
இனிமேல் டி.டி.வி.தினகரன் பேச்சு எடுபடாது, ஜெயிலர் படத்தைவிட அ.தி.மு.க மாநாடு அதிகம் பேசப்பட்டது. போராடுவதற்கு அ.தி.மு.க-வை ஏன் தி.மு.க அழைக்கிறது… உண்ணாவிரதத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
நன்றி
Publisher: www.vikatan.com